லண்டன் இசை நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான இன்று மதியம் மூவர் இசை. பீத்தாவன், டெபுஸி, சோபின் - மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள்.
ஒரே நாளில் பல அரங்கங்களில் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுவாக, என் அலுவலகத்துக்கு அருகே இருக்கும் அரங்கத்தை மட்டுமே இதுவரை தேர்ந்தெடுத்து வந்தேன். ஆனால், பல இடங்களிலும் நிகழ்ச்சி நடப்பதால் இசை நிரலை ஒரு முறை நோட்டம் விட்டபின் செல்லும் வழக்கத்தைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். பிரத்யேகமான காரணம் என எதுவுமில்லை என்றாலும், பல தேவாலையங்களில் ஒரு குறிப்பிட்ட வகை இசையை மட்டுமே வாசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டு இசை எனும் நவீன வகைகளின் ஆத்திகவாதம் ஒவ்வாதது ஒரு காரணமாக இருக்கலாம்.
கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக வளம் பெற்று வரும் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தை இசை விமர்சகர்கள் பலவிதங்களில் வகைப்படுத்தியுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தூய சாஸ்த்ரிய சங்கீதம், பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதம், இருபதாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ இசை என மேலோட்டமாக இதைப் புரிந்துகொள்ளலாம். கலை, நாடகம், இலக்கியம், தத்துவ தளங்களிலும் இதே பிரிவினை உண்டு.
கால தேச வர்த்தமானங்களைத் தாண்டி இன்னொரு வகையான பிரிவினை கொண்டு மேலும் நெருக்கமாக இதைப் புரிந்துகொள்ளலாம்.
கர்நாடக சங்கீத பாணியில் இப்பிரிவினையை லட்சண இசை, லட்சிய இசை எனக் குறிப்பிடலாம். இசை இலக்கணத்துக்கு உட்பட்டு எவ்விதமான லய ஸ்ருதி இலக்கண விழைவும் அல்லாது திட்டமிட்ட வடிவில் அமைவது லட்சண இசை. மிகவும் கட்டுக்கோப்போடு எல்லை தாண்டிவிடாமல் கவனத்தோடு அமையும் இசை இது. இசைக் கலைஞரின் கற்பனை, படைப்பாற்றல் திறமைக்கு உட்பட்டு இசை இலக்கணத்தை மீறி அழகியலின் உச்சகட்ட சாதனையாகப் படைப்பது லட்சிய இசை. லட்சிய இசை தடைகளே இல்லாதது. கலைஞருக்கே தெரியாமல் லட்சண பாவங்கள் அதில் தென்படலாம், ஆனால் திட்டமிட்டு அவை உருவாக்கப்ப்டுவதில்லை. கர்னாடக சங்கீதம், ஜாஸ் போன்றவற்றில் இருக்கும் இயல்பான மெருகேற்றம் கலைஞரின் திறமையை வெளிக்காட்டவதினால் லட்சிய இசைக்கு உருவாகிறது.
லட்சிய இசைக்கு அசாத்திய கற்பனை அவசியம். அதைத் தவிர அளவிலாத துணிவும் மிக அவசியம். குறிப்பாக, இசை போன்ற மென் உணர்வுகளைத் தூண்டக்கூடியத் துறையில் லட்சிய இசையின் செல்வாக்கு எல்லா இடத்திலும் பொருந்தாது என்பது என் எண்ணம். கூட்டத்துக்குத் தகுந்தாற்போல லட்சண அல்லது லட்சிய இசையை உருவாக்கும் இசைக்கலைஞர்களும் உண்டு. லட்சிய இசையை இசைக்கும் திறமைக்கு ஒப்புக்கொடுக்கும் வண்ணம் கேட்பவர்களின் மனோபாவமும் இருக்க வேண்டும்.ஜனரஞ்சகமானக் கலவைக் குழுவில் லட்சிய இசைக்கான செவிகள் குறைவாகவே அமையும்.
என் அலுவலகத்தருகே இருந்த இரு தேவாலயங்களிலும் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் இருந்தன. ஒன்றில் பீத்தாவனின் இசைத் துணுக்குகள். மற்றொன்றில் சில குரலிசைப் பாடல்கள் - தேவாலய சான்ட்ஸ் வகையறா. இரண்டையும் கேட்க மனமில்லாமல், சற்று தூரத்தில் இருந்த பிஷப்கேட் கல்லூரி அரங்கில், டெபுஸி, சோபின், பீத்தாவன் இசையைக் கேட்கச் சென்றேன்.
இதில், சோபினின் இசையை சில இடங்களில் கேட்டிருந்தாலும், டெபுஸி முற்றிலும் புதுசு. அதற்காகவே இந்த நிகழ்வைத் தேர்ந்தெடுத்தேன். முழு திருப்தி எனச் சொல்லமுடியாது. சாஸ்த்ரிய சங்கீதத்தில் புதுவகை முயற்சிகளையும், பின்நவீனத்துவ இசைத் துணுக்குகளையும் ரசிக்க ஒரு மனக்குவிப்பு அவசியம். அதுவும் தொடர்ச்சியாக கேட்டால் மட்டுமே அவற்றின் பிரயோகங்களும் நளினமும் புரியும். இசையை இசைக்காக மட்டும் ரசிக்க ஒருவித கனிவான மனநிலை தேவைப்படுகிறது. தத்துவப் பாடல்களைக் உணர்ந்து ரசிக்கத் தேவைப்படும் மனச் சஞ்சலம் போல. குறிப்பாக, டெபுஸி போன்ற நவீன பாணி இசைத் துணுக்குகளை பயன்படுத்தியவர்களது இசையை சாப்பாடு முடித்தபின் வெத்தலை மடித்தபடி ‘ஆமாம், ஒரு பாட்டு படி’ என ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்க முடியாது.
ஏன் அப்படி ஒரு மனநிலை தேவைப்படுகிறது?
பொதுவாக இசையை ரசிக்கத் தேவைப்படும் மனநிலைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. சில வகை இசை தன்னியல்பாகவே நம் உணர்வுகளைத் தூண்டிவிடும். பழைய ஞாபகங்கள் வழியாக. ஏற்கனவே கேட்ட பாடலென்றால் அப்போது நடந்து சம்பவத்தை நினைவுக்குக் கொண்டுவந்து நம்மிடையே உறவாடத் தொடங்கிவிடும். நண்பனைப் போல, நம் தோளில் உட்காரக்கூடிய அவற்றுக்கு ஏற்ப நம் மனநிலையும் மாறிவிடும். ஊரடிங்கிய நள்ளிரவில் ரசிக்கும் பழைய சினிமா பாடல்கள் போல.
ஆனால், சில நுணுக்கமான வாசல்கள் வழி மேற்கத்திய இசை நம்மை அடைகிறது. கான்சர்ட்டோ, சிம்பொனி எனச் சொல்லும்போது கூடவே வரும் E Major, G Minor எனும் கார்ட்ஸ் வகைகள் இதற்கு பெரிதும் உதவுகின்றன. ராகங்களில் சில குறிப்பிட்ட ஸ்வர சஞ்சாரங்கள் முக்கிய்மானவை, தனித்துவமானவை என்பதுபோல இந்த இசைக்கு கார்ட்ஸ்கள் தான் ஆதார ஸ்ருதி. நன்றாக கவனிக்கும்போது, இந்த கார்ட் தான் மீண்டும் மீண்டும் பல திசைகளிலிருந்து வந்தடையும் இடமாக இருக்கும். அதாவது E Major எனும் இசை கோர்வை, E Major கார்டில் தொடங்கும், பின்னர் பல ஸ்வர கூட்டணிகள் இசையின் கருவை வளர்த்தெடுக்கும். ஆனாலும், அப்படி திசையறியாமல் செல்லும்போதெல்லாம் நம்முடைய நினைப்பு முழுவதும் தொடங்கிய E Major ஸ்வரக் கூட்டிலேயே இருக்கும். எப்போது திரும்ப அங்கேயே வருமோம் என இருக்கும் - இந்த தவிப்பு தான் இசையின் ஆதாரம்.
பீத்தாவனுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் ரசிகர்களை மகிழ்விக்க பல முறை ஆதார ஸ்ருதியை நோக்கி தங்கள் ஸ்ருதிகளை ஒன்றிணைப்பார்கள். ஆதார ஸ்ருதியைப் பல முறை வலம் வருவார்கள். நம் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை இது உண்டாகும். ஆனால், இதையே செய்துகொண்டிருந்தால் அலுப்பாகிவிடும் என்பதால் ஸ்வர சஞ்சாரத்தில் ஈடுபட்டு பல ஸ்வரங்களில் வலம் வருவார்கள்.
பீத்தாவனுக்குப் பின்னர் வந்தவர்களில் பலர் நாடகத்துக்குத் தேவையான தவிப்பு, இழப்பு, தாபம் போன்ற உணர்வுகளை இசையில் உருவாக்கத் தொடங்கினர். அந்த டென்ஷனை கடைசி வரை தக்கவைக்கவோ, ரசிகர்களை அளவுக்கதிமான தவிப்பில் தத்தளிக்கவைக்கவோ இது மிகவும் உபயோகமாக இருந்தது. இதை chromatic harmony என வகைப்படுத்துவர். அதாவது ஆதார கார்டின் ஸ்வரங்களை தொடாமல் மற்ற ஸ்வரங்களை மட்டும் உபயோகப்படுத்தும் பாணி. கீழுள்ள காணொளியில் இது மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது. மகிழ்வான உணர்வைத் தரக்கூடிய கொண்டாட்டமான இசை என யாரேனும் இதைக் கூற முடியுமா? அதற்காக இது சோக இசை என்று அர்த்தமாகாது. ஏதோ முடிவடையாத உணர்வு எஞ்சி இருக்கும் என்பது கேட்கும்போது தெரியும்.
டெபுஸியின் ’நீர் பிம்பங்கள்’ (Reflects dans l'eau from Images) இசை அப்படிப்பட்ட உணர்வை இன்று எனக்குத் தந்தது. மிகவும் தத்தளிக்கும் உணர்வு. ஒருவேளை இசையமைப்பாளர் இந்த உணர்வைத் தரவேண்டும் என நினைத்தாரோ என்னமோ? ஆனால், தொடங்கிய நொடியிலிருந்து மிகவும் சஞ்சலத்தை மட்டுமே இந்த இசை அளித்தது. மதிய வேளையில் அலுவலக வேலைகளின் இடைவெளியில் கேட்கக் கூடிய இசையில்லை. பல கார்டுகளை ஒன்றாக ஒலித்த சமயம் இசையின் ஸ்வர விலகல்கள் மட்டுமே அதிகமாக இருந்தது. ரொம்பவும் dischordant இரைச்சல். வேறொரு தருணத்தில் கேட்டால் நம் மனதைத் தொட்டுப் பார்க்கும் என நினைக்கிறேன். அதற்கான தருணம் வாய்க்க வேண்டும். கீழிருக்கும் காணொளியில் இதைக் கேட்கலாம்.
டெபுஸியின் புதுவகை நுணுக்கங்களை பின்னர் வாக்னரும் பிரயோகப்படுத்தினார். குறிப்பாக வாக்னரின் ’லே வல்கைர்’ எனும் இசை நாடகத்தில் chromatic harmony வகை டென்ஷன்களை உபயோகித்திருப்பதால் டெபுஸியே இதன் தந்தை என அழைக்கப்படுகிறார். வாக்னரின் நாடகங்களில் இதன் பிரயோகம் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.
அடுத்து, சோபினின் இசை A Flat Major மற்றும் C Sharp Minor பாடங்கள் (Etude in A Flat Major Op25, Etude in C Sharp minor Op.25). மிக ரம்மியமான தாலாட்டு இசை போல இருந்தன. ஆனால் இதிலும் சில அபஸ்வர துணுக்குகள் நவீன முயற்சி போலத் தோன்றியது. இசை தரும் மனவிலக்கமும் ஒருவகை உணர்வு தான்.
கடைசியாக வந்தது பீத்தாவனின் சொனாட்டா (D Minor Op 32). பீத்தாவனின் இசை மேல் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. லட்சிய இசைக்கு மிகச் சிறந்த உதாரணமாக இவரது இசையைச் சொல்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்தது அவ்ரது தனியாத கனவு காணும் கலைஞர் எனும் முகம் தான். காது கேட்காமல் போனபின்னும் மிகப் பிரம்மாண்டமான இசையை எழுதியிருக்கிறார். குறிப்பாக அவரது கடைசி காலகட்டது இசை, நீல் ஆம்ஸ்ட்ராங் போல, a giant leap for mankind தான். இந்த சொனாட்டாவிலும் முதல் பகுதியில் வரும் தீவிரம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாகத் தோன்றியது. குறிப்பாக, 0:38 பகுதியிலிருந்து வரும் கருவை மீண்டும் மீண்டும் பல இடங்களில் கொண்டு இணைக்கும் அவரது பாங்கு ஆஹாகாரம் போட வைத்தது. நிச்சயம் கேட்க வேண்டிய ஒரு இசைத் தொகுப்பு.
ஏன் நவீன புது முயற்சி இசையை ரசிக்கும் மனநிலை நமக்கு ஒர் acquired taste ஆகவே இருக்கிறது? நம்மால் திரும்ப நினைவுபடுத்தக்கூடிய சொற்கட்டுகள், இசை துணுக்குகள் உள்ள இசையை மட்டும்தான் ரசிக்கிறோமா? முணுமுணுக்க முடிகிற இசைத்துண்டுகள் தான் நம்மை பாடலுடன் அல்லது இசையுடன் மீண்டும் உறவுகொள்ள வைக்கும் அடிப்படை ரகசியமா? ரயில் தண்டவாளங்கள் போல எந்த மன நிலையிலும் நம்முள் சேராத இசை வகைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அவற்றுக்கு பல சந்தர்பங்கள் அளிப்பது போல, இசையில் வரும் பல பிரயோகங்களும் நமக்கு பல சந்தர்பங்களை அளிக்கின்றன. ஏதேனும் ஒன்றைப் பிடித்து என் கதவைத் திறந்திட மாட்டாயா எனக் கேட்பது போல.
எதைக் கேட்டு பாதிக்கப்பட்டு ’இதயம் போகுதே’ பாடல் உருவானது என இளையராஜா மனம் திறந்திருப்பதை சமீபத்தில் பார்த்திருப்போம். எப்படி நாட்டுப்புற இசை சங்கதிகளை பாடல்களில் புகுத்தியுள்ளாரோ, அதே மாதிரி மேற்கத்திய சாஸ்த்ரிய இசை பாணியும் அவரது இசையில் நிரம்பியுள்ளன. arrangement எனச் சொல்லக்கூடிய பாணிமாற்றத்தில் மிகவும் தேர்ந்தவர். அதாவது, சில வாத்தியங்களைக் கொண்டு ஒரு பாணியில் அமைந்த இசையை, வேறொரு கருவியில் முற்றிலும் புது பாணியில் தரக்கூடியதைத் தான் arrangement எனக் கூறுவர். ராஜாவின் பின்னணி இசையில், ஒரு இடத்தில் தந்திக் கருவிகள் செய்யும் ஜாலத்தை வேறொரு இடத்தில் குழல் கருவிகள் செய்யும். அப்படி ஒரு விஷயத்தைத் தான் இந்த பாடலில் அவர் செய்துள்ளார்.
ஷூபர்டின் முடிவடையாத சிம்பொனியின் (Schubert Unfinished Symphony 8) முதல் பகுதியை இளையராஜா மேடையில் ஒருங்கிணைத்தார். பின்னர், அந்த இசையின் அடித்தள உணர்வு மாறாமல் பாடலாக மாற்றியதையும் செய்து காட்டியதும், நம்முன் நிகழ்த்தியதும் ஒரு பெரும் ரிக்கார்டிங் அறையில் இருந்து கவனிக்கும் சந்தோஷத்தை அளித்தது. கீழே ஷுபர்டின் Unfinished Symphony.



Recent Comments