நண்பர் அய்யனார் கூகிள் பஸ்ஸில் Departures என்ற ஜப்பானியத் திரைப்படம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். குறிப்பாக படத்தின் நாயகன் செல்லோ கலைஞன் என்றவுடன் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இசைக் கலைஞர்களைப் பற்றிய படங்களில் பொதுவாக பின்ணணி இசை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம். பொதுவாக இம்மாதிரி புகழ் பெற்ற அ-ஆங்கிலப் படங்களை லவ்பிலிம் தரவு வரிசையில் போட்டால் வருவதற்கே மாமாங்கம் ஆகிவிடும். ஆச்சர்யமாக இந்தப் படம் ஒரே வாரத்தில் வந்து சேர்ந்தது.
முழு கதையைச் சொல்லி, காமிரா கோணங்கள் மேக்கிங் சில்லாப்புகளை விவரித்து, பின்னணி இசையின் ரசாபாவத்தை சிலாகித்து (என்னையும்) உங்களைப் படுத்தப்போவதில்லை. ஆனால் இந்தப் படம் என்னை மிகவும் அழ வைத்தது. அதைப் பற்றி மட்டும் இந்தப் பதிவில் எழுதப் பார்க்கிறேன்.
நான் பொதுவாக மசாலாப் படங்களை அதிகம் பார்ப்பவன், ரசிப்பவன். மிகவும் கலைத்துவமான உலகப் படங்கள் என ஒருசிலவற்றை மட்டுமே பார்த்துள்ளேன். அவற்றில் வெகு சில படங்கள் என்னை அழ வைத்துள்ளன. இந்தப் படத்துல என்ன இருக்குன்னு இவன் அழுதான்னு தோன்றும்படியானப் படங்களும் அதில் அடக்கம். அதனால் அந்தப் படங்களைச் சொல்லப்போவதில்லை. அப்படங்கள் அந்தந்த வயதுக்கேற்ப மன நிலைக்கேற்ப சிற்சில சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வெளியான நாட்களில் பிடிக்காத 'அஞ்சலி', சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் பார்த்தபோது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. 'குணா', 'Schindler's List', 'Life is Beautiful' போன்ற ஒருசில படங்களை எப்போது பார்த்தாலும் மனம் கனக்கும். டைடானிக் படமும் முதல் முறை கலங்கடித்தது என்றாலும் பின்னர் அவ்வளவாகக் கவரவில்லை.
மிக மெதுவானத் தொடக்கம். செல்லோ ஆர்கெஸ்ட்ரா கலைந்த பின் செய்வதறியாது தன்னுடைய கிராமத்துக்குத் திரும்பும் நாயகனுக்கு சவப்பெட்டி தயாரிக்கும் ஏஜென்சியில் வேலை கிடைக்கிறது. சவப்பெட்டி தயாரிப்பதோடு மட்டுமல்லாது ஜப்பான் நாட்டுச் சம்பிரதாயப்படி இறந்தவர்களை அலங்காரம் செய்யும் பொறுப்பும் அவனது வேலை. பல கஷ்டங்களுக்கிடையே தன் முதலாளியிடமிருந்து இதைக் கற்றுக்கொள்கிறான்.
ஜப்பான் நாட்டுக் கலாச்சாரத்தில் இது ஒரு முக்கியமான இறுதிச் சடங்கு. உடலைப் பாதுகாப்பதுபோல, ஒன்பது துவாரங்களை சுத்தம் செய்வதும், anoint செய்வது போல ஜவ்வாது வாசனைப் பொருட்களைக் கொண்டு தோலைச் சுத்தம் செய்வது, சவரம் செய்து மேக்கப் போட்டு முகத்தை மிக அழகாக மாற்றுவது, அவர்களுக்கு விருப்பமான ஆடையை உடுத்தச் செய்வது என உலகை விட்டுப் பிரியும் உடலுக்கு அலங்காரம் பிரமாதமாக நடக்கும். இதைச் செய்தபின் உறவினர்களும், நண்பர்களும் இறந்தவருக்கு கடைசி மரியாதை செய்வர். இவ்வளவு கனமான விஷயம் மிக இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அதிகப்படியான சோகம் வெளிப்படுவதில்லை. படம் நெடுகிலும் வரும் மிக இயல்பான மெல்லிய நகைச்சுவை படத்தை ரசித்துப் பார்க்க வைக்கிறது.
சங்ககால இலக்கியத்திலிருந்து இன்றைய 'இடைவெளி (சம்பத்)' வரை, மரணத்தின் அர்த்தம் மற்றும் அர்த்தமின்மை பற்றி பலதளங்களில் படித்திருக்கிறோம். வாழ்வென்பது கொண்டாட்டம் மட்டுமே என நினைக்கக்கூடிய பல சமூகப் பழக்கங்களையும், மரணத்தை இயல்பாக எதிர்கொள்ளும் கல்யாணச் சாவுகளைப் பற்றியும் பல கதைகள் தினப்படி நமக்குக் கிடைக்கின்றன. பல சமயங்களில் மரணத்தை மிக சந்தோஷத்தோடு எதிர்பார்க்கும் 'வாழ்ந்து முடித்தவர்' சாவைப் பற்றியும் நமக்குத் தெரியும். துரத்தும் மரணத்துக்குப் பயந்து ஊரை விட்டு ஓடிய முல்லா கதையிலிருந்து, மரணத்தை வெல்ல சொல்லப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள் கதை வரை, மரணத்துடனான சமரசத்தை உருவாக்கும் பார்வை கோணங்கள் எண்ணிலடங்காமல் விரவியிருக்கின்றன.
சமரசத்தையும் தாண்டி வாழ்வினூடாகப் பிரிக்கமுடியாத சங்கதியாக இருக்கும் மரணத்தின் கடைசி சடங்குகளை உறவுகளும் சமூகமும் எப்படி எதிர்கொள்கின்றன என்பது இப்படத்தின் கதை.
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்வரை பல காட்சிகளில் கண் கலங்கினேன்.
குறிப்பாகத் தன்னுடைய அப்பா எனத் தெரிந்தபின் அவரது சடலத்தை கதாநாயகன் அலங்காரம் செய்யும் கடைசி காட்சியைப் பார்த்தபடி அழுதுகொண்டே இருந்தேன். முழுவதாக நான்கு நிமிடங்கள் நீளும் காட்சி அது. இசையோ உரையாடலோ இல்லாமல் மெளனமாக நடக்கும் மிக அற்புதமான காட்சி. ஆரம்பத்தில் ஒரு பாட்டியின் சடலத்தை அவளது பேத்திகள் விதவிதமாக அலங்காரம் செய்து சிரித்து ரசிக்கும் காட்சி ஒன்று வரும். பேத்திகள் பாட்டியின் பிணத்துக்கு அலங்காரம் செய்து படுத்தும் பாடு மிகவும் சந்தோஷமான தருணங்களில் ஒன்று. இறப்பவரின் மன நிறைவைப் பொருத்து சடங்குகள் சந்தோஷமாகவோ துக்கமாகவோ நடத்தப்படுகின்றன. இப்படி சின்னச் சின்னக் காட்சிகள் மூலம் படத்தில் சொல்லாமல் உணர்த்தபடும் விஷயங்கள் பல இருக்கின்றன.
கடைசி அலங்காரத்தையும் மிக முழுமையாக அனுபவித்து செய்வதற்கும், இறந்தவருக்குப் பிடித்ததுபோல உடைகள் அணிவிப்பதற்கும் நல்ல சாவாக இருத்தல் அவசியம். அப்படி இல்லாத காட்சிகளை, சாவுக்குக் கூடியிருப்போர் மனதில் இருக்கும் இறுக்கத்தை பல இடங்களில் உரையாடல் இல்லாமலேயே நிகழ்த்திக் காட்டியுள்ளனர். மன அமைதியுடன் இதைச் செய்வதற்கு சாவின் இயல்பும் ஒரு காரணமாகிறது. எப்படியாகினும், இறந்தவர் நம்மிடையே விட்டுச் செல்லும் சில சந்தோஷ நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. உடனடியாக இல்லாவிடினும், நிறைவாக வாழ்ந்தவர்களது மரணம் அவர்களுடனான சந்தோஷமான தருணங்களை சிறிது நாட்களுக்கேனும் நெருங்கியவர்கள் மனதில் தங்கவைக்கும்.
குறிப்பாக, கோபத்துடனும் அழுகையுடனும் சடலத்தைத் தழுவியபடி, அறியமுடியாத மரணத்தின் காரணத்தை கேள்விகளாகக் கதறிக் கேட்கக் கூடிய வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. சடலத்தை அணைத்தபடி நம் கோபங்களையும் துக்கங்களையும் கூப்பாடு போட்டு கதறக் கூடிய வாய்ப்புள்ள மரணம் ஒரு விதத்தில் பார்த்தால் நற்சம்பவம் தான். அந்த எளிய விஷயம் கூட கிடைக்காத எண்ணிலடங்கா மரணங்கள் ஒவ்வொரு நிமிடமும் நடந்தபடிதான் உள்ளது. சடலம் கூடக் கிடைக்காத, கிடைத்தாலும் அலங்காரத்துக்குத் தகாத எத்தனை துர்மரணங்கள் நம்மைச் சுற்றி நடந்துள்ளன எனக் கணக்கிட்டாலே இதன் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். என் அப்பா, நெருங்கிய நண்பன் என இருமுறை எனக்கு இது நடந்துள்ளது. இதனாலேயே இப்படம் இன்னும் அதிகமாக என்னை பாதித்தது என நினைக்கிறேன். அப்படிப்பட்ட இறப்புகளை நெருக்கமாகப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் சொல்லாமல் விட்ட செய்தி புரியும்.



Recent Comments